சனி, 26 டிசம்பர், 2020

ஜோதி வழிபாடு

நம் நாட்டில்ஜோதி வழிபாட்டில் பிரசித்தமான இடங்கள்  மூன்று!
ஓன்று வடலூர் வள்ளலார் திருச்சபையின் தைபூச அருட்பெருஞ்சோதி வழிபாடு!
இரண்டாவது திருவண்ணாமலை கார்த்திகை தீப வழிபாடு !
மூன்றாவது சபரிமலை தை மாத மகர ஜோதி !




சனி, 18 ஜனவரி, 2014

அமிர்தகடேஸ்வரர் ஆலயம் -மேல கடம்பூர்!




நண்பர் Sasi Dharan ஒரு பதிவு போட்டிருந்தார்.மேல கடம்பூர் அருள் மிகு அமிர்தகடேஸ்வரர் கோவில் பற்றிய பதிவு அது.போதாதற்கு பொன்னியின் செல்வன் சம்பந்தப்பட்ட இடம் என்று வேறு சொல்லி ஏன் ஆவலை மேலும் தூண்டிவிட்டார்!
இரவு முழுதும் வந்தியதேவனும் ,ஆதித்த கரிகாலரும்,நந்தினியும், பழுவேட்டரயர்களும் ,என்னை தூங்க விடாமல் துவம்சம் செய்து கொண்டிருந்தார்கள்,
இன்று காலை விடிந்தும் விடியாமலும் கடுங்குளிரில் பைக்கை எடுத்துக்கொண்டு பறந்து போனேன் அந்த கடம்பூர் மாளிகைக்கு !
கண்டு ரசித்தேன் அந்த கலை பொக்கிஷத்தை!
நன்றிகள் சோழனுக்கு நல்ல கலைப்டைப்பை நிறுவியதற்கு !இன்னொரு நன்றி அடையாளம் காட்டிய நண்பர் சசி தரனுக்கு!
சசியின் பதிவிற்கான இணைப்பு -https://www.facebook.com/SasidharanGS
 (10 photos)







இதோ நண்பர் சசிதரனின் வரிகளிலேயே இந்த கோவிலை பற்றி தெரிந்து கொள்வோம்!
மேலக்கடம்பூர் கோயிலை வந்தடைந்தோம். மேலக்கடம்பூர் எங்கேயோ கேள்வி பட்ட ஊர் போன்று தோன்றுகின்றதா? ஒரு க்ளு, வீரநாராயண ஏரி, கடம்பூர் மாளிகை, ஆதித்த கரிகாலன் கொலை…. ஞாபகம் வந்திவிட்டதா, அதே வரலாற்று சிறப்பு வாய்ந்த கடம்பூர் தான், அந்த ஊரில் இருக்கும் "அமிர்தகடேஸ்வரர்" கோயிலுக்கு தான் வந்திருக்கிறோம். உள்ளே நுழையும் போது சாதாரண ஒரு கோயிலாக தான் இருந்தது.கோயிலுக்குள் நுழைந்து கருவறையை சுற்றி இருக்கும் வெளிப் பிரகார சிற்பங்களை காணலாம் என்று முன்னேறுகையில் அந்த காட்சி எங்களை மிரளச் செய்தது!! நாம் இந்திர லோகத்திற்கு வந்திருக்கிறோமா? அல்லது தமிழகத்தில் தான் இருக்கிறோமா? என்று யோசிக்க வைத்தது. விமானம் முழுவதுமே 4 சக்கர தேர் வடிவில்!! அந்த விமானத்தை குதிரைகள் இழுத்துக்கொண்டு ஓடிவதை போன்ற அமைப்பு!! பக்தி இலக்கியங்களில் கூறப்படும் 9 வகையான சிவன் கோயில் அமைப்பில் இது "கரக்கோயில்" அமைப்பை சார்ந்தது. அதாவது விமானம் முழுவதும் தேர் வடிவில். அருகில் இருந்த நண்பரின் முகத்தைப் பார்க்கையில், வாயில் வார்த்தை இல்லாமல் வாயடைத்துப் போய் சுயநினைவற்றவராய் இருந்தார். மீள்வதற்கு சற்று நேரமாயிற்று.

விமானம் முழுக்க இராமாயணம்,சிவனின் திருவிளையாடல்கள், நாயன்மார்களின் கதைகள்,கிருஷ்ணனின் லீலைகள், என அசத்தலான சிற்பங்கள், எதை ரசிப்பது அங்கே? நான்கு அடி உயரமிருக்கும் சந்திரரை ரசிப்பதா? சூரியரை ரசிப்பதா? அல்லது கங்காதரரையா? வித்யாசமான கட்டிட அமைப்பிற்குள் ரிஷபத்தின் மீது அமர்ந்திருப்பதை போன்ற தக்க்ஷணாமூர்த்தியையா? அல்லது நான்கே இன்ச் அளவில் வலது காலை தரையில் ஊன்றி இடது காலை மடித்து அபய முத்திரையுடன் நடனமாடிக்கொண்டிருக்கும் நடராஜரை ரசிப்பதா? வித விதமான யாளி மிருகங்களையா? கட்டை விரல் உயரமே உள்ள சிங்கங்களையா? இது என்ன சோதனை கடவுளே!! எறும்புக்கு சக்கரை பிடிக்கும் தான், அதற்காக மூச்சு தினறம் வகையில் அதன் தலை மீதா கொண்டு போய் கொட்ட முடியும்? அது ஆபத்தில் அல்லவா முடியும்? எங்களுக்கு அப்படி தான் இருந்தது அங்கு. இதை எல்லாம் மனிதர்கள் தான் செய்திருப்பார்களா? அப்படி செய்திருந்தால் அவர்கள் எப்படிப்பட்ட கலா ரசிகர்களாக இருந்திருப்பார்கள்! தானும் யாருக்கும் சளைத்தவன் அல்ல என்பதை சாளுக்கிய- சோழ வம்சத்தில் வந்த முதலாம் குலோதூங்கன் தன் பங்கிற்கு இது போன்ற ஒரு அழகான கோயிலை எழுப்பி நிரூபித்து விட்டாரே!

சுற்றி வந்து கொண்டே இருக்கையில், இடைவிடாது அந்த ஜதி சப்தம் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது! தை..தை.. தித்தித்தை..தை..தை.. தித்தித்தை..எங்கிருந்து வருகின்றது இந்த இனிமையான சப்தம் என்று சற்று மேலே நிமிர்ந்து பார்த்தால் விமானத்தில் ஆடல் மங்கையரின் சிற்பங்கள்!! ஒவ்வொரு மங்கையருக்கு அருகிலும் இசை வாத்தியம் வாசிக்கும் இருவர், அவர்கள் வாசிக்கும் இசைகேற்றார் போல் நடனம் அரங்கேறுகின்றது!!அந்த மங்கையரின் உடை அலங்காரமென்ன!! ஒயிலென்ன!! நளினமென்ன!! நடன அசைவுகலென்ன!! சற்று உயரத்தில் இருக்கவே அவை சிலைகள் தானா அல்லது உண்மையான மங்கையரா என்று தொட்டு பார்த்து சோதிக்க முடியவில்லை.

மனிதர்கள் இந்த கோயிலுக்கு வந்தால் வெளியே செல்லவே கூடாது என்று மனதில் வைத்து கட்டியதை போன்ற கொள்ளை அழகு! பங்குனி மாதம் 3,4,5 ஆம் தேதிகளில் காலை உதயத்தின் போது சூரியன் பதினைத்து நிமிடங்கள் சிவனை வழிபடுகிறார்!. வாதாபியில் இருந்து வெற்றிப் பரிசாக பல்லவர்கள் கொண்டு வந்த கணபதி சிலையை போன்று, ராஜேந்திர சோழன் கங்கை வரை சென்று போர் செய்து வெற்றி பெற்று அந்த போர் வெற்றியின் நினைவாக வங்க தேசத்தில் இருந்து கொண்டு வந்த அற்புதமான "தச புஜ ரிஷப தாண்டவமூர்த்தி" இந்த கோயிலில் காணக்கிடைகிறார், பத்து கைகளிலும் ஆயுதங்களுடன், தேவர்களும் ரிஷிகளும் பாதத்தின் கீழ் சூழ, ரிஷபத்தின் மீது ஆடிக்கொண்டிருக்கும் அற்புதமான சிலை, பிரதோஷத்தின் போது மட்டுமே பூஜைக்காக பொது மக்கள் பார்வைக்கு அவர் காட்சி தருகிறார்.

கருவறைக்கு சென்று தேவாரம் போற்றிய இறைவனை வணங்கிவிட்டு, ராஜ ராஜனின் அண்ணன் "ஆதித்த கரிகாலனை" கொன்ற துரோகிகளான "ரவிதாசன்,பரமேஸ்வரன்,சோமன்" கூட்டாளிகள் காட்டுமன்னார் கோயில் கருவறையின் பின் புறம் ஒளிந்திருப்பதாய் தகவல் கிடைக்க, அந்த கயவர்களை இருட்டுவதற்குள் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தினால் வேறு வழி இன்றி அரை மனதுடன் அந்த கோயிலை விட்டு வெளியேறினோம். நீங்கள் தமிழகத்தில் பிறந்திருந்து இந்த கோயிலுக்கு இது நாள் வரை செல்லாதவராக இருப்பின், அதை விட பேரிழப்பு வேறேதும் உங்களுக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


இங்குள்ள சிவலிங்கம் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும். பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின்போது, இரவில் சந்திர ஒளி சுவாமி மீது விழுவதும் சிறப்பு. சனீஸ்வரருக்கு ஆரம்ப காலத்தில் கழுகுதான் வாகனமாக இருந்தது. ராமரின் தந்தையான தசரதர், அவருக்கு கழுகுக்கு பதிலாக காகத்தை கொடுத்தார். இங்குள்ள சனீஸ்வரர் கழுகு வாகனத்துடன் காட்சி தருகிறார். எனவே, இவர் ராமாயண காலத்திற்கும் முற்பட்டவர் என்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 34 வது தேவாரத்தலம் ஆகும்.

செவ்வாய், 29 ஜனவரி, 2013


நித்ய கல்யாண பெருமாள் கோயில்,

திருவிடந்தை.


திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில்சென்னையிலிருந்து புதுச்சேரிவரை செல்லும் கிழக்குகடற்கரை சாலையில் கோவளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது..
 மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள், அகிலவல்லித் தாயார் ஆவர். மூலவரின் சன்னதிக்கு வலதுபுறத்தில் கோமளவல்லித்தாயாருக்கு ஒரு சன்னதியும், இடதுபுறத்தில் ஆண்டாளுக்கு ஓரு தனிச்சன்னதியும் உள்ளது. திருவரங்கப்பெருமாளுக்கும் ஓரு தனிச்சன்னதி உள்ளது.

தலவரலாற்றின்படி மூலவர் நித்ய கல்யாணப்பெருமாளான மகாவிஷ்ணு தினம் ஓரு பெண்ணாக வருடம் முழுவதும் திருமணம் செய்ததாகவும் அதனாலே மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்.

திருமணத்தடை ,குழந்தைபேறுஇன்மை ஆகிய குறைகளுக்கு பிரார்த்தனை செய்து கொண்டால் நிச்சயம் பலன் கிடைக்கும் .

காஞ்சி ஏகாம்பர நாதர் கோயில். தொண்டை நாட்டின் மிக புகழ் வாய்ந்த சிவத்தலம். கோயிலின் பரப்பளவு சுமார் 23 ஏக்கர். பண்டைய சமய ஏடுகளில் திருக்கச்சி ஏகம்பம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏகம்+ஆம்ரம் = ஏகாம்பரம். ஒப்பற்ற மாமரம். அதனடியில் அமர்ந்து அருள்பாலிப்பதால் இறைவன் ஏகாம்பரநாதர் என்ற பெயர் பெற்றார். தன்னை எதிப்பவர் பலத்தில் பாதிப் பலம் கிட்டும்படி வாலி வரம் பெற்றது இங்குதான். வரம் பெற்றவன், இங்குள்ள சிவலிங்கத்தை வாலால் பெயர்க்க விழைகிறான். லிங்கம் ஒரு அங்குலம் கூட அசையவில்லை! அகந்தை அகன்று பெருமானை வழிபட்டுச் சென்றான். பெற்ற பெருவரங்களால் கயிலை மலையைப் பெயர்க்க முயற்சிக்கிறான் இராவணன். சிவன், தனது கால்விரலை லேசாக அழுத்த, இராவணன் சிக்குண்டு “கச்சிஏகம்பனே” என்று கதறுகிறான். மனமிரங்கிய ஏகாம்பரேஸ்வரன் அவனை மன்னித்து அருள்புரிகிறார். சுந்தரர், தனது இழந்த பார்வையைப் பெற்ற திருத்தலம். 172 உயரமுள்ள இராஜகோபுரம் கொண்ட தலம். முதல் அடியார்கள் மூவரால் பாடல் பெற்ற திருத்தலம். 108 வைணவத் தலங்களில் ஒன்றான நிலாத்திங்கள் துண்டப் பெருமாள் இங்கு தனிச் சன்னதியில் நின்ற திருக்கோலத்தில் அருள்புரியும் தலம்.
பஞ்சபூதத் தலங்களில் இது பூமி. (பிருத்வி) இன்னும் சிறப்புகள் ஏராளம்!
காஞ்சிபுரம் பயணம்.

சனி, 11 பிப்ரவரி, 2012

பிரளயகாலேஸ்வரர் கோயில்






பிரளயகாலேஸ்வரர் கோயில் ,பெண்ணாடம் .

தொழுதூரிலிருந்து திட்டக்குடி வழியாக விருத்தாசலம் செல்லும் சாலையில் வெள்ளாற்றங்கரையில் அமைந்துள்ளது பெண்ணாடம். ஆதிகாலத்தில் பெண்ணாகடம் என்றழைக்கப்பட்ட இவ்வூரில் அமைந்துள்ளதே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம்.

மூலவர் : பிரளயகாலேஸ்வரர் ( சுடர்க்கொழுந்துநாதர்)


அம்மன்/தாயார் : அழகிய காதலி (ஆமோதனாம்பாள், கடந்தை நாயகி)

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 2வது தலமாகும்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார்.. வெள்ளத்திலிருந்து பூமியை காப்பதற்காக அன்று திசை திரும்பிய நந்தி இன்றும் வாசலை நோக்கி திரும்பியே இருக்கிறது. .இக் கோயிலில் ஆஞ்சநேயருக்கும் சந்நிதி உண்டு.
கலிக்கம்பநாயனார், மெய்கண்டார், ஆகியோருக்கும் சந்நிதிகள் இங்கே இருக்கின்றன!

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

திருப்பனந்தாள் செஞ்சடையப்பர் கோவில்!





திருப்பனந்தாள்-செஞ்சடையப்பர்


:கும்பகோணத்திலிருந்து சென்னை நெடுஞ்சாலையில் வடகிழக்கில் 18 கிலோ மீட்டரில் உள்ளது.
தலவிருட்சம்:பனைமரம் பனைமரத்தைத் தலவிருட்சமாக கொண்ட தலம்.எனவே இவ்வூருக்கு பனந்தாள் என்று பெயர்.தெய்வப்பனை இரண்டு இக்கோயிலின் பிரகாரத்தில் இருக்கிறது





கோவில் அமைப்பு:

மேற்கு நோக்கி உள்ள செஞ்சடையப்பர் கோவிலின் வாயிலில் நீண்டுயர்ந்த கோபுரம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் 16 கால் மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தின் கீழ்ப்புறம் நாககன்னிகை தீர்த்தம் இருக்கிறது. கோவிலின் வெளிப் பிரகாரத்தின் கீழ்ப் பக்கத்தில் ஸ்தல விருட்சம் பனைமரமும் அதன் அருகில் தாடகை வழிபட்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறது. மூலவர் செஞ்சடையப்ப்ர் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. இதற்கு வடக்கில் மேற்கு நோக்கிய பிரஹந்நாயகியின் சந்நிதி இருக்கிறது.

வழிபட்டோர் : பிரமன், திருமால், இந்திரன், ஐராவதம், அகத்தியர்,
சூரியர், சந்திரன், ஆதிசேஷன்,
நாககன்னிகை, தாடகை, குங்கிலியக்கலய நாயனார்
ஆகியோர்.

இத்தலத்தில் தான் குமரகுருபர சுவாமிகள் நிறுவியுள்ள ஸ்ரீ காசிமடம் உள்ளது.